உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூரில் விவசாய நிலங்களில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் விஜயசாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினரின் ஓடையை அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தனிநபர் 4 பேர் ஆக்கிரமித்து இருந்து சுமார் 500 மீட்டர் அளவிலான ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, வருவாய் ஆய்வாளர் பாலு, கிராம நிர்வாக அலுவலர் பஞ்சமாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா, ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.