உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி கொலை?- போலீசார் விசாரணை

Published On 2022-04-22 10:22 GMT   |   Update On 2022-04-22 10:22 GMT
உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). விவசாய தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நாகராஜ் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக செல்போன் மூலம் புஷ்பாவிடம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு நாகராஜ் அழைத்தார். ஆனால் புஷ்பா வர மறுத்துவிட்டார். இதில் நாகராஜ் மன உளைச்சலில் இருந்துவந்தார்.

இன்று காலை நாகராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல்வழியாக உள்ளே பார்த்தபோது நாகராஜ் வேட்டியால் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்து நாகராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால் நாகராஜின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News