உள்ளூர் செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. மாணவர் அணியின் தேசிய அளவிலான மாநாடு- உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

Published On 2022-04-21 06:17 GMT   |   Update On 2022-04-21 06:17 GMT
தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை:

தி.மு.க. மாணவர் அணி சார்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 30 மற்றும் மே 1 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்கள். மாநாட்டின் நிறைவு நாளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்.

2 நாட்கள் மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்திய அளவிலான பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

உங்களது கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழகத்தன் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு பணியாற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரிய நோக்கை பறைசாற்றும் வகையிலும் தேசிய கல்வி கொள்கை மற்றும் கல்வியின் மீதான மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களையும் ஆணைகளையும் எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் முதற்படியாய் இந்த மாநாடு அமைய உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் ஆலோசனை பெற்று, இந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News