உள்ளூர் செய்திகள்
மேட்டூரில் போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி
மேட்டூரில் போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்கிற மச்சி அரவிந்த் (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் உள்ளது.
பிரபல ரவுடியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் இருந்த குமரேசன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் கை கடிகாரத்தை பறித்து சென்றார்.
இதுகுறித்து குமரேசன் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். மேட்டூர் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் மேட்டூர் அனல் மின் நிலைய புதுப்பாலம் அருகே அரவிந்த் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அறிந்த போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று அரவிந்தை பிடிக்க முயன்றனர். உடனே அரவிந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க தப்பி ஓடினார். அப்போது தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் அரவிந்தை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.