உள்ளூர் செய்திகள்
உண்ணாவிரத போராட்டம்

தியாகதுருகம் அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-04-19 09:50 GMT   |   Update On 2022-04-19 09:50 GMT
குடிநீர் உப்பு நீராக உள்ளது எனவே ஏரிக்கரை அருகில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைகள் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே அசகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பாலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், தண்ணீர் வரி ரூ.360 செலுத்தினால் மட்டுமே 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்படும் என பொதுமக்களை நிர்பந்தம் செய்யக்கூடாது, அண்ணா நகர் பகுதிக்கு பகுதிநேர ரே‌ஷன் கடை அமைத்து தர வேண்டும், தற்போது வழங்கும் குடிநீர் உப்பு நீராக உள்ளது எனவே ஏரிக்கரை அருகில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைகள் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள் எந்த நிபந்தனையும் இல்லாமல் 100 நாள் வேலை திட்ட அட்டை அனைவருக்கும் 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் தங்களின் கோரிக்கைள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், கிராம வார்டு உறுப்பினர் பெரியம்மாள் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News