உள்ளூர் செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

Published On 2022-04-19 10:33 IST   |   Update On 2022-04-19 12:53:00 IST
கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு இன்று தமிழக கவர்னர் ஆர். என்.ரவி வந்தார். அப்போது அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிசா, தென்மன்டல கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

கோவில் நிர்வாகம் மற்றும் கணேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கஜ பூஜையும், கோபூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது.

இதையடுத்து கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சிறிது நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.

முன்னதாக திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆதீன மடத்துக்கு கவர்னர் என்.ஆர்.ரவி காரில் சென்றபோது செல்லும் வழியில் கம்யூனிஸ்ட், மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டது உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News