கடலூரில் இரு தரப்பினர் மோதல்- 26 பேர் மீது வழக்கு
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சரவணன், அவரது மனைவி சங்கரி ஆகியோர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர் நகரில் உள்ள பூர்வீக வீட்டுக்கு தங்குவதற்கு சென்றனர்.
அப்போது சரவணன் தம்பி முருகன் உள்ளிட்ட 4 பேர், சரவணன், சங்கரி ஆகியோர் தங்குவதற்கு இங்கு இடமில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் சரவணன் மற்றும் அவரது மனைவி சங்கரி ஆகியோரை கட்டையால் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தும் சங்கரியை மானபங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் சரவணன், சங்கரி ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் இது தரப்பினரும் தகராறு செய்து கொண்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் முருகன், ஆனந்தன், கீதா, வாசுதேவன், பேபி உள்ளிட்ட 6 பேர் மீதும், எதிர் தரப்பில் பேபி (72) கொடுத்த புகாரின் பேரில் சரவணன், சங்கரி மற்றும் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.