உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்ற கிராம மக்கள்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்ற கிராம மக்கள்- பரபரப்பு

Published On 2022-04-18 15:48 IST   |   Update On 2022-04-18 15:48:00 IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மானூர் அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களது இந்திரா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 190 குடும்ப அட்டைகள் உள்ள எங்களது பகுதியில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகள் கிடையாது.

 பொருட்களை வாங்கு-வதற்காக நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல பாலாமடை ராஜ-வல்லிபுரம், காட்டாம் புலி, கீழ பாலாமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.

இதனால் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே எங்களது இந்திராநகர் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மனு அளித்துள்ளோம்.

 எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை அமைவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். என்று கூறினர். அதுவரை ரேஷன் பொருட்கள் வாங்க போவதில்லை என்று கூறி ரேஷன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News