உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே கோஷ்டி மோதல் - 15 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே கீழ குறும்பனையை சேர்ந்தவர் மரிய ஜாண் (வயது 67). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (45) என்பவருக்குமிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இரணியல் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத் தன்று மரிய ஜாண், ஆன்றோ, பென்டோ ஆகியோர் கடற் கரைக்கு செல்ல பால்வாடி பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுரேஷ் அவர்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார்.
இதையடுத்து மரிய ஜாண், சுரேஷ் ஆகியோர் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் பென்டோ, சுரேஷ், அம்னு ரோச்சல் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
பென்டோ ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், சுரேஷ் இரும்பிலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், அம்னு ரோச்சல் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மரிய ஜாண், சுரேஷ் ஆகியோர் தனித் தனியாக குளச்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.