உள்ளூர் செய்திகள்
புதுப்பெண் உள்பட 3 பெண்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதுப்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் தேர்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அபிராமி (வயது 24). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (27). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் அசேன். இவரது மனைவி உமேரா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதில் மனமுடைந்த உமேரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெண்ணின் தந்தை பயாஸ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணமாகி 3 மாதத்தில் புதுப் பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.