உள்ளூர் செய்திகள்
கனமழை - வடிகால் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வாழப்பாடி பகுதியில் வடிகால் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியில் நேற்று மாலையில் கருமேகம் திரண்டது. பின்னர் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிங்கிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே திருமலை நகரில் உள்ள 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சிங்கிபுரம் பகுதியில் உள்ள நீரோடையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே தண்ணீர் செல்ல தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தம்மம்பட்டி- வாழப்பாடி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் வரதராஜன், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தண்ணீர் வடிகால் வசதி செய்து தரப்படும் என்று கூறியதன் பேரில் சமாதானம் அடைந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.