உள்ளூர் செய்திகள்
நடுக்காட்டில் 4-வது நாளாக நிற்கும் லாரிகள்.

தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் 4-வது நாளாக நடுக்காட்டில் தவிக்கும் லாரி டிரைவர்கள்

Published On 2022-04-14 13:14 IST   |   Update On 2022-04-14 13:14:00 IST
கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வாகனங்கள் தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கடந்த 4 நாட்களாக நடுக்காட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு, காத்திருக்கின்றன.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

தினமும் மலைப்பாதையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போனதால் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்கள் கொண்ட வாகனங்களுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் இந்த சாலையில் 16.2 டன் எடைக்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சத்தியமங்கலம் மற்றும் தாளவாடியில் கடையடைப்பு போராட்டமும், பண்ணாரி சோதனைச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் அதிக எடை ஏற்றி சென்ற பத்து சக்கர லாரிகளுக்கும் சோதனைச்சாவடியில், வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வாகனங்கள் தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கடந்த 4 நாட்களாக நடுக்காட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு, காத்திருக்கின்றன.

10 சக்கர வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இருக்கும் நிலையில், கூடுதல் எடை அளவு உள்ளதாக காரணம் கூறி, அந்த வாகனங்களுக்கும் அனுமதி மறுத்து காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நடுக்காட்டில் சாப்பிட வழியில்லாமல் கடந்த 4 நாட்களாக தவித்து வருவதாக லாரி டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாளவாடி பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும். நடுக்காட்டில் வெட்டப்படும் கரும்புகளை எடை போட்டு ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

ஆனால் வனத்துறையினர் அதிக எடை ஏற்றி வருவதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கரும்பு லாரிகளை அனுமதிக்க மறுத்து விட்டனர். கடந்த 4 நாட்களாக லாரியில் ஏற்றப்பட்ட கரும்புகள் வெயிலில் வாடி வருகிறது. இதன் காரணமாக எடை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கரும்பு லாரிகளை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் 1000 ஏக்கர் கரும்பு அறுவடை பாதிக்கப்படும். மேலும் வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுளளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News