மொடக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மொடக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னியப்பன் (58). இவர் கடந்த சில வருடங்களாக மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காடு வலசு பகுதியை சேர்ந்த பூசப்பகவுண்டர் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவர் முள்ளாம் பரப்பில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தமிழ் வருட பிறப்பையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சின்னியப்பன் மற்றும் அவரது மனைவி மற்றும் மருமகள், குழந்தைகள் அனைவரும் திருவண்ணாமலை அருகே உள்ள கலசபாக்கம் ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் விஜய்மட்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தில் உள்ள மோட்டார் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா தவிதமாக மின்சாரம் தாக்கி விஜய் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த விஜய்க்கு திருமணமாகி மனைவி, 6 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.