உள்ளூர் செய்திகள்
போட்டி தேர்வு திறன் வளர்க்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம்
பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு போட்டி, நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக இந்த முயற்சி உதவும்.
திருப்பூர்:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் திறனை மேம்படுத்தி நாடு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளி கல்வித்துறை சிறப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதற்காக தேர்வு தயாரிப்பு வினாடி வினாக்கள் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள் பயிற்சி செய்யவும் இது உதவும்.
அனைத்து அரசு பள்ளி ஹைடெக் ஆய்வகத்தில் இந்த வினாடி வினாக்கள் கிடைக்கும்.கல்வி நோக்கத்திற்காக ஆய்வகங்களை அணுக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுவதை உறுதிசெய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் தேவையான நடவடி க்கைகளை எடுக்கலாம்.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-
பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு போட்டி, நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக இந்த முயற்சி உதவும்.
மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த சுழற்சி அடிப்படையில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் அந்தந்த பாட ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
முதல் நாளன்று கணிதம் வினாக்கள் இடம்பெற்றிருந்தன.சனிக்கிழமை - இயற்பியல், செவ்வாய் - வேதியியல், சனி - தாவரவியல், செவ்வாய் - விலங்கியல் கேள்விகள் இடம்பெறும். இரண்டாவது சுழற்சியில், சனிக்கிழமை - கணிதம், செவ்வாய் - இயற்பியல், சனி - வேதியியல், செவ்வாய் - தாவரவியல், சனிக்கிழமை - விலங்கியல் கேள்விகள் கேட்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.