உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
புதுவை கோரிமேட்டில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு லோகேஸ்வரி (21) உள்பட 2 மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி தாகூர் தனியார் கல்லூரியில் பி.எ. பிலாசபி 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் லோகேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது காதலனுடன் செல்போனில் பேசியதை கோவிந்தராஜன் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் படித்து முடித்த உடன் அவருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.
கோவிந்தராஜின் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியுடன் சென்றார். இதனால் 2 மகள்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். சம்பவத்தன்று மதியம் லோகேஸ்வரியின் தங்கை உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென லோகேஸ்வரி சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த அவரது தங்கை இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தூக்கிலிருந்து லோகேஸ்வரியை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஸ்வரி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பறிதாபமாக இறந்து போனார்.
பின்னர் இதுகுறித்து கோவிந்தராஜன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.