உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் நானை சோதனை ஓட்டத்துக்கு தயார் நிலையில் உள்ள ரோப் கார்

லட்சுமி நரசிம்மர் கோவிலிலுக்கு செல்ல வசதியாக சோளிங்கரில் நாளை ரோப் கார் சோதனை ஓட்டம்

Published On 2022-04-13 11:31 IST   |   Update On 2022-04-13 11:31:00 IST
ரோப் கார் சோதனை ஓட்டம் நாளை (வியாழக்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி தொடங்கப்படுகிறது. இதற்காக ரோப் கார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார்.

மலை மீது 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர்.

டோலி மூலம் தொழிலாளர்கள் பக்தர்களை சுமந்து செல்ல வசதி இருந்தாலும், ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் நிறைவு பெற்றது.

ரோப் கார் சோதனை ஓட்டம் நாளை (வியாழக்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி தொடங்கப்படுகிறது. இதற்காக ரோப் கார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சோதனை ஓட்டம் முடிந்த பிறகு தமிழக முதல்- அமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் முறைப்படி ரோப் கார் ஓடத் தொடங்க உள்ளது.

மொத்தம் 4 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 பேர் பயணம் செய்ய முடியும். அடிவாரத்தில் இருந்து 4 நிமிடத்தில் மலை உச்சிக்கு இந்த ரோப் கார் சென்றுவிடும்.

இதனால் வயதானவர்கள் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இனி லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து திரும்பலாம்.

சென்னைக்கு மிக அருகில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவில் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற வாய்ப்புள்ளது.

மேலும் அங்கு ரூ.11 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் அறைகள் கழிவறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சோளிங்கரில் நாளை ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News