உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகை திருடியவர் கைது

Published On 2022-04-11 16:42 IST   |   Update On 2022-04-11 16:42:00 IST
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 29). இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அருகில் இருந்த முட்புதரில் பதுங்கியிருந்த மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க செயினை திடீரென பறித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட  மகேஸ்வரி தாலி செயினை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு இவரது கணவர் ராஜா வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். அதற்குள் மர்மநபர் தாலி செயினை பறித்துச் சென்றார்.

அப்போது தாலியில் இருந்த குண்டு, நாணல்கள் ஆகியவை கீழே சிதறி கிடந்தன. இதுகுறித்து மகேஸ்வரி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியான நபர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணையில் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி (வயது 39) என்பதும், நிறைமதி மகேஸ்வரியிடம் இருந்து தாலி செயின் பறித்து சென்றதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலி செயினை மீட்ட போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் நாராயணசாமி கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News