உள்ளூர் செய்திகள்
மீன் வியாபாரிகள் திடீர் போராட்டம்
புதுவையில் மீன் வியாபாரிகள் திடீர் போராட்டத்தால் விற்பனை முடங்கியது
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள பெரியமார்க் கெட்டில் மீன் மொத்த விற்பனை அங்காடி இயங்கி வந்தது.
சுமார் 60 ஆண்டுகளாக மீன் ஏலம் விடப்பட்டு மீனவர்கள் விற்பனை செய்து வந்தனர். இங்கு சில்லரை வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுத்து விற்பனை செய்வது வழக்கம். நகர பகுதி நெரிசலை கருத்தில்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.13 கோடியில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது.
ஆனால் மீனவர்கள் அங்கு சென்று வியாபாரம் செய்வதில்லை. பெரிய மார்க்கெட் பகுதியில் மீன்களை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெரிய மார்க்கெட் பகுதியில் மீன்கள் இறக்கி விற்பனை செய்ய போலீசார் தடை விதித்தனர்.
இதை கண்டித்து அதிகாலையில் மீனவர்கள் மறியல் செய்தனர். 2 நாட்களில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. 2 நாட்களாக மீன்களை இறக்க போலீசார் அனுமதி மறுத்து வந்தனர். இதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெரிய மார்க்கெட் முன்பு திரண்டு மீன்களை விற்பனை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரியமார்க்கெட்டில் மீன் விற்பனை முடங்கியது. மீன் வியாபாரிகள் மீன்களை விற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் போராட்டத்தையொட்டி பெரிய மார்க்கெட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.