உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர்கள்
மொடக்குறிச்சி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
மொடக்குறிச்சி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதி (வயது 23). இவர் சோலாரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
தினமும் இவர் வேலைக்கு வீட்டிலிருந்து நடந்து சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலை முடித்துக்கொண்டு ஸ்ரீமதி செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீமதியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்.. திருடன். என கூச்சலிட்டார் ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஸ்ரீமதி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.