உள்ளூர் செய்திகள்
மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன் சூளகிரி அருகே பயங்கரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி:
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர தாலுகா லால் பகதூர் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற அப்புகான் (வயது 60). இவரது மனைவி சவுதம்மா (50). மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
அடிக்கடி மது குடித்து வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் சவுதம்மா அவரை பிரிந்தார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா காமன்தொட்டி அருகே உள்ள கோபசந்திரத்தில் தங்கி, அருகில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6ந் தேதி சவுதம்மா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணி தனது மனைவியை மாலூருக்கு வருமாறு அழைத்தார். ஏற்கனவே வாழ்ந்த காலத்தில் தன்னை கொடுமைப்படுத்திய கணவருடன் இனியும் வாழ வேண்டாம் என முடிவு செய்த சவுதம்மா தான் வர மாட்டேன் என தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சவுதம்மாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து உடலில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். பின்னர் சவுதம்மாவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் ஜெயசங்கர் என்பவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி, மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மணி என்கிற அப்புகானை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.