திருநாவலூரில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 45) விவசாயி. இவருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவரது 2 மகள்களையும் ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இவரது மகள்கள் திருமணத்திற்காக கண்ணையன் கடன் வாங்கினார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடன் கொடுத்தவர்கள் கண்ணையன் வீட்டிற்கு வந்து கடனைத் திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு அவர் கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதற்கு கடன் கொடுத்தவர்கள் மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணையன் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள நிலத்தில் இருந்த முந்திரி தோப்பில் உள்ள பலா மரத்தில் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் கண்ணையன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.