உள்ளூர் செய்திகள்
புதுவை அரசு

புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு

Published On 2022-04-06 09:36 IST   |   Update On 2022-04-06 16:27:00 IST
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

புதுச்சேரி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

அதிகரித்து வரும் பண வீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து 2020-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

ஓராண்டுக்கு பிறகு 2021 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. 11 சதவீத அகவிலைப்படி உயர்வானது.

மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இதனால் 28 சதவீத அகவிலைப்படியானது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அகவிலைப்படி 31-ல் இருந்து 34 சதவீதமானது. இது புதுவையிலும் ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வந்துள்ளது. இதை நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்... சோனியா காந்தியுடன் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு

Similar News