உள்ளூர் செய்திகள்
கைது

வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகள் கைது

Published On 2022-04-04 09:11 IST   |   Update On 2022-04-04 09:11:00 IST
வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவர் தனது நண்பர்களுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக, சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு அங்கு பதுங்கி இருந்த விக்னேஷ், அவரது நண்பர்களான சென்னை செனாய் நகரை சேர்ந்த தேவசகாயம் (36), திருவேற்காடு பால்வீதி தெருவை சேர்ந்த எழிலரசன் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீழபென்னாத்தூர் பகுதியை சேர்ந்த தினகரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

விக்னேஷ் மீது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும், இவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும், தேவசகாயம் மீது சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவரது பெயரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரியவந்தது.

இவர்கள் எதற்காக வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News