உள்ளூர் செய்திகள்
மீன் வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் மீன் வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்டை லட்சுமண நாட்டார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது35). இவர் பழைய பேட்டையில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் நேற்றுமுன்தினம் 3 பேர் வந்து மீன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பிட்டு விட்டு உங்கள் கடையில் உள்ள மீன் நல்லா இல்லை. கெட்டுபோன பழைய மீன் வைத்து விற்பனை செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து சங்கர் இரவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கரை வழிமறித்து மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சங்கர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்காளிதெருவை சேர்ந்த கண்ணன் (23) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கொத்தபேட்டைகாலனியை சேர்ந்த சுரேஷ், சுறா என்கிற ரித்திக் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.