உள்ளூர் செய்திகள்
பண மோசடி

திருமணம் செய்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் ரூ.27 லட்சம் பறித்த வாலிபர்

Published On 2022-04-02 15:02 IST   |   Update On 2022-04-02 15:02:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.27 லட்சம் பறித்த வாலிபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சின்ன ஏலசகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் குமுதா (வயது 37). திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் மறுமணம் செய்வதற்காக தனியார் திருமண மையத்தில் குமுதா, பதிவு செய்திருந்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்தில் இருந்து பேசுவதாக ஒரு வாலிபர் அறிமுகமாகி பேசியுள்ளார். அவர் கடந்த ஆண்டில் இருந்து குமுதாவிடம் இ-மெயில் மூலம் தினமும் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது தன்னை கண் மருத்துவர் என அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். மேலும் குமுதாவை தனக்கு பிடித்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி குமுதாவும் பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ரூ.80 ஆயிரம் டாலரை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதனை பெற்று கொள்வதற்காக நீங்கள் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்து கொள்ள பணத்தை கட்டி விடுங்கள் என்று கூறினார். மேலும் அதற்காக 7 வங்கி கணக்கு விவரங்களையும் குமுதாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த வங்கி கணக்குக்கு சிறிது சிறிதாக குமுதாவும், ரூ.27.66 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர், குமுதாவுடன் பேசுவதை திடீரென நிறுத்தி விட்டார்.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமுதா, இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News