உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன்-மருமகள்

Published On 2022-04-01 15:17 IST   |   Update On 2022-04-01 15:17:00 IST
ரெட்டியார்பாளையத்தில் சொத்தை பிரித்து தராததால் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன்- மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம்- வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஏகியம்மாள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம் இறந்து விட்டார். இதையடுத்து ஏகியம்மாள் தனது வீட்டில் இளைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். வீட்டின் மாடியில் மூத்த மகன் பிரசாத், தனது மனைவி காயத்திரியுடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரசாத் தனது தாயிடம் சொத்தை பிரித்து தரக்கோரி பிரச்சினை செய்து வந்தார். இது சம்பந்தமாக ஏற்கனவே ஏகியம்மாள் கலெக்டரிடம் புகார் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரசாத் மற்றும் அவரது மனைவி காயத்திரி ஆகியோர் சொத்தை பிரித்து தரக்கோரி ஏகியம்மாளிடம் கேட்டனர்.  இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரசாத் மற்றும் அவரது மனைவி காயத்திரி ஆகியோர் ஏகியம்மாளை  தரக்குறைவாக திட்டி அவரை தாக்கினர்.  மேலும் சொத்தை பிரித்து தராவிட்டால் கொலை செய்து விடுவதாக ஏகியம்மாளை மிரட்டினர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஏகியம்மாள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர்  இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News