உள்ளூர் செய்திகள்
கலெக்டர் லலிதா

ரூ.2 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் - கலெக்டர் தகவல்

Published On 2022-04-01 15:00 IST   |   Update On 2022-04-01 15:00:00 IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.2 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் சாலை ராஜன் தோட்டத்தில் ரூ.2 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட  கலெக்டர் லலிதா  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

முதலமைச்சர் கடந்த ஆண்டு இளைஞர், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்த கூடிய வகையில் 50 இடங்களில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ராஜன்தோட்ட பகுதியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.2 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது இளைஞர்கள், மகளிர், குழந்தைகள் அறிவை வளர்க்க கூடிய திட்டமாகும். குழந்தைகளுக்கு அறிவை மேம்படுத்தக்கூடிய தொடுதிரை, ஒலி அமைப்பு போன்ற கருவிகளுடன் இங்கு வர உள்ளது. இளைஞர்களுக்கு போட்டித் தேர்வை எதிர்கொள்ள இது ஒரு பயனுள்ள திட்டமாகும். இளைஞர்கள்
குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டி தேர்வுகளுக்கு இங்கு படிப்பதற்குரியஅனைத்து புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்படும்.

இதே திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் வர உள்ளது. ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அறிவுசார் மையம் 5000 ச.அடி பரப்பளவில் அமையவுள்ளது.

தரைத்தளம் மற்றும் முதல்தளம் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது. மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை திறம்பட அமைத்திட இந்நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பயனுள்ளதாக இருக்கும். அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு வகையில் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

இந்த அறிவுசார் மையத்தில் மாணவ, மாணவிகள், சிறுவர்கள், பொதுமக்கள் படிக்கும் அறைகள், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, கணினி உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்கும் அறை, சிறுவர்கள் விளையாட வசதிகள், போன்ற வசதிகளுடன் இங்கு அமைய உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் விரைவில் வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி பொறியாளர் சனல்குமார், ஒப்பந்ததாரர் உத்திராபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News