உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி (கோப்புப்படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 ½ லட்சம் பேர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை

Published On 2022-04-01 12:13 IST   |   Update On 2022-04-01 12:13:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு 94.72 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

கொரோனா என்ற கொடிய உயிர்க்கொல்லி நோயை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (சனிக்கிழமை)மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு 94.72 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.

கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் ஆகும். இதுவரை 2,46,079 நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதே போல கிராம வாரியாக ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 385 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News