உள்ளூர் செய்திகள்
ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதில் ரூ.40Ñ லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை பொதிகை நகர் 3-வது கிராசில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.புதுவையில் உள்ள பல்வேறு வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் பணியை அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது புதுவை பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதில் லட்சகணக்கில் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் பணம் நிரப்பும் பணியை செய்த தனியார் நிறுவன ஊழியரான லாஸ்பேட்டை சாந்தி நகர் இளங்கோ தெருவை சேர்ந்த சிவரஞ்சன் (50) என்பவர் ரூ.40 லட்சத்து 22 ஆயிரத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் மின் கட்டணம் ரூ.45 ஆயிரத்தையும் கையாடல் செய்திருப்பது தெரிந்தது.இதனையறிந்த சிவரஞ்சன் தலைமறைவானார்.
பின்னர் இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி குமார் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவரஞ்சனை தேடிவருகின்றனர்.
ஏனாம் பிராந்தியம் கோலாகபத்துல்லா வீதியில் தனியார் ஏஜென்சியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.
மாலை 4 மணிக்கு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற வாலிபர், தன் கையில் கொண்டு வந்த கம்பியால் எந்திரத்தை உடைத்துள்ளார். அலாரம் உதவியால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சித்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் ஏனாம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த மோகன சந்திரராவ் (எ) நாகாராவ்(19)என தெரியவந்தது.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நாகாராவ், பணம் இல்லாததால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சித்தது தெரிந்தது. திருட்டு முயற்சியால் ஏ.டி.எம் எந்திரம் உடைந்து பழுதானது. கைது செய்யப்பட்ட நாகாராவ், ஏனாம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.