ஆறுமுகநேரியில் சரக்கு ஆட்டோவிற்கு தீ வைப்பு
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜ மன்னியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் ஹேம்ராஜ் (30). இவர் சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர் வெளியே வந்துள்ளார். அப்போது இவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் உடனே சத்தம் போடவும் அக்கம்பக்கத்தில் இருந்து சிலர் கூடினர். அப்போது இருட்டு பகுதியில் இருந்து ஒரு கும்பல் கற்களை வீசி விட்டு சென்றுள்ளது. இதனிடையே பலரும் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி முழுவதும் எரிந்து கரிக்கட்டை ஆனது.
இச்சம்பவம் குறித்து சார்லஸ் ஹேம்ராஜ் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார்.
கடந்த 27-ந்தேதி ஆறுமுகநேரியில் நடைபெற்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான பொது மக்களின் சாலை மறியல் போராட்டத்தில் சார்லஸ் ஹேம்ராஜும் கலந்து கொண்டதால் அவர் மீது ஆத்திரமடைந்த கும்பல் அவரது சரக்கு ஆட்டோவிற்கு தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆறுமுகநேரியில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ராஜமன்னியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் சரக்கு ஆட்டோ தீ வைப்பு சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.