உள்ளூர் செய்திகள்
குழந்தை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் கட்டில் உடைந்ததால் தாய்-பச்சிளம் குழந்தை காயம்

Published On 2022-03-29 10:46 IST   |   Update On 2022-03-29 10:46:00 IST
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் பெண் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைந்து பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:

அரசு ஆஸ்பத்திரி என்றாலே பொதுமக்கள் செல்ல தயங்கும் நிலையில் பல குறைபாடுகள் அங்குள்ளன. இதன் காரணமாக பலரும் அரசு மருத்துவமனைகளை தவிர்த்து கூடுதல் பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

சுகாதார சீர்கேடு, போதிய கவனிப்பின்மை என அடுக்கடுக்கான புகார்களை அரசு ஆஸ்பத்திரி மீது பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் பெண் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைந்து பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் பரங்கிலி நாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி.

இவர் 2-வது பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 24-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து மகப்பேறு பிரிவில் குழந்தையுடன் தங்கி முத்துலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு குழந்தையுடன் அவர் படுத்திருந்த இரும்பு கட்டில் திடீரென உடைந்து விழுந்தது.

இதனால் கட்டிலில் படுத்திருந்த முத்துலட்சுமியும், குழந்தையும் கீழே விழுந்தனர். இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையும், தாயும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறுகையில், பிறந்த குழந்தையை பார்க்க வந்த பெண்ணின் உறவினர்கள் கட்டிலில் அமர்ந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் அவர்கள் அமர்ந்ததால் கட்டில் உடைந்து இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த உறைவிட மருத்துவர் டாக்டர் முருகேசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது.

மகப்பேறு பிரிவில் 30 படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கைகளும் உறுதியாக உள்ளதா? என்பது குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதன் பிறகு பழுதான கட்டில்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தை நலமாக உள்ளது. தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளது என்றார்.

Similar News