உள்ளூர் செய்திகள்
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வில்லியனூர் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களின் சட்டபையில் சிறுசிறு பொட்டலங்களாக 20 பாக்கெட் கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 170 கிராம் கஞ்சா அவர்களிடமிருந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கரிக்கலாம்பாக்கம்-மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்த ராஜேஷ்(வயது28), கரிக்கலாம்பாக்கம் புதுவாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த விக்கி(28) மற்றும் மேட்டுப்பாளையம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (38) என்பதும் இவர்கள் அப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து
கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா விற்பனை பணம் ரூ-.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.