உள்ளூர் செய்திகள்
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓசூர் சர்வேயர் கைது
ஓசூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து, உட்பிரிவு செய்து தர, அந்த பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகினார்.
இந்த பணிக்காக, வடிவேல் தனது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர், ரூ.30 ஆயிரத்தை ஹரிநாத் வழங்க சம்மதம் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். போலீசாரின் ஆலோ சனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று, ஓசூர் பாகலூர் சாலையில், ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வடிவேலின் வீட்டுக்கு ஹரிநாத் கொண்டு சென்றார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் அவரை பின் தொடர்ந்தனர்.
இந்த நிலையில், வடிவேல் வீட்டுக்குள் சென்ற ஹரிநாத், பணத்தை அவரிடம் வழங்கினார். அதை வடிவேல் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையிலான போலீசார், வடிவேலை கையும், களவுமாக பிடித்து லஞ்சப்பணத்தை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
மேலும் இரவு வரை 8 மணி வரை அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அங்கு வடிவேலுடன் இருந்த புரோக்கர் தமீசும் கைது செய்யப் பட்டார்.
லஞ்சம் வாங்கி சர்வேயர், மற்றும் புரோக்கர் கைதான சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.