உள்ளூர் செய்திகள்
சான்றிதழில் திருத்தம் செய்து 31 ஆண்டுகளாக வேலை பார்த்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்டு’
சான்றிதழில் திருத்தம் செய்து 31 ஆண்டுகளாக வேலை பார்த்த தலைமை ஆசிரியையை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த சோபனூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 56). இவர் கடந்த, 1991ம் ஆண்டு ஜூன் மாதம் காவேரிப்பட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பிறகு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று பாறையூர், திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றினார்.
இவர் பணிப்பதிவேட்டில், 10, பிளஸ்2, ஆசிரியர் பட்டயப்பயிற்சி சான்றிதழ்களை முன்னிலைபடுத்தி பதிவுசெய்ய பலமுறை அறிவுறுத்தியும் இவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி அரசுத் தேர்வுகள் இயக்குனர் ராகினி, காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜானுக்கு, சுமதி, 10ம் வகுப்பு சான்றிதழ் நகலில் போலியாக திருத்தம் செய்து பணியில் சேர்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட் டுள்ளதாகவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறும் கடந்த, 10ந் தேதி கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து இந்த தகவலை வட்டாரக்கல்வி அலுவலர் சபிக்ஜான், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடிக்கு கடந்த, 14ந் தேதி கடிதமாக அனுப்பினார். இந்த நிலையில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய சுமதி உரிய விளக்கம் அளிக்காமலும், கடந்த பிப்ரவரி 3ந் தேதி முதல் தொடர் மருத்துவ விடுப்பும் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, சுமதியை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தர விட்டார். மேலும், கடந்த 31 வருடங்களாக போலி ஆவணத்தை சமர்பித்து அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய சுமதி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.