உள்ளூர் செய்திகள்
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
காலதாமதப்படுத்தாமல் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவையில் துரதிர்ஷ்டவசமாக 11 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.
அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் என்பது காந்தி கண்ட கனவாகும். அதை ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் நிறைவேற்றினார்.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக புதுவையில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை இனியும் காலதாமதம் செய்யாமல் நடத்த வேண்டும்.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 10 மாதத்தில் பிற்படுத்தப்பட்டோர் புள்ளிவிபரத்தை சேகரித்திருக்கலாம். இதற்கு மேலும் காலதாமதப்படுத்துவது என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா அரசின் திட்டமிட்ட சதியாகும்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மத்தியிலிருந்து நிதி வராமல் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.