உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-03-26 12:19 IST   |   Update On 2022-03-26 12:19:00 IST
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் எலக்ட்ரிசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை வாணரபேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது26) எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

 இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவிக் கிடையே குடும்ப தகராறு ஏற்பட்ட போது வெங்கடேசிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி ஆனந்தி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து வெங்கடேஷ் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை பல முறை குடும்பம் நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந்தி வரமறுத்து விட்டதாக தெரிகிறது இதனால் வெங்கடேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். வெங்கடேஷ் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின் விசிறியில் போர்வையால் தூக்கு போட்டு தொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தூக்கில் இருந்து வெங்கடேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெங்கடேசின் உறவினர் விண்சென்ட் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News