உள்ளூர் செய்திகள்
ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்த மனுவை புகழேந்தி காண்பித்த போது எடுத்த படம்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரணை: எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் ஓசூரில் புகழேந்தி பேட்டி

Published On 2022-03-25 15:13 IST   |   Update On 2022-03-25 15:13:00 IST
எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசமி ஆணையம் விசாரித்தால் ஜெயலலிதா மரணம் குறித்து பல உண்மைகள் வெளிவரும் என்று ஓசூரில் புகழேந்தி கூறினார்.
ஓசூர், 

அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி  ஆணையத்தில், முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும் என்று மனு அளித்திருப்பதாக புகழேந்தி தெரிவித்தார். 

மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், முன்னாள்  முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதை தொடர்ந்து, இந்த கமிஷனை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எடப்பாடி பழனிசாமியுடன்,  நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன்.  நடந்தவைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் வரிப்பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.   

பன்னீர்செல்வமும்,  எடப்பாடி பழனிசாமியும் இணைப் பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது.  எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் முதல்& அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து புகழேந்தி நிருபர்களிடம் கூறும் போது, ‘‘ ஜெயலலிதா இறந்தது டிசம்பர்  4-&ந்தேதியா, அல்லது 5-ந்தேதியா? என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதியின்படி, ஆறுமுகசாமி கமிஷனை மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொண்ட முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Similar News