உள்ளூர் செய்திகள்
அரவிந்தர் ஆசிரம கேண்டீனுக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தின் உணவு விடுதி (கேண்டீன்) புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் உள்ளது.
இங்கு ஆசிரமவாசிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆசிரமத்திற்கு வருபவர்கள் உணவு அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கையில் கத்தியுடன் ஆசிரம கேன்டீனுக்குள் நுழைந்தார்.
இதனை கண்டதும் கேன்டீனுக்குள் இருந்த ஆசிரமவாசிகள் அச்சமடைந் தனர். அந்த பெண் நாக்கை ஆக்ரோஷமாக நீட்டி, கண்களை உருட்டி மிரட்டியதால் அனைவரும் பயத்தில் உறைந்து போய் நாலாபுறம் சிதறி ஓடினர்.
இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பெண்ணிடமிருந்த கத்தியை கீழே போடும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பெண் கோபமாக காணப்பட்டதால் போலீசாருக்கு அந்த பெண்ணை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் பின்புறமாக சென்று அந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப் பட்ட பெண் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கடவுள்களின் பெயரை கூறி, அவர்கள் தன்னை அழைப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின்
உறவினர்கள் வம்பாகீரப் பாளையம் பகுதியில் இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கத்தியுடன் பெண் ஆசிரமத்திற்குள் நுழைந்த சம்பவம் ஆசிரமவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.