ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி புதுவையில் விற்பனை செய்த வாலிபர் கைது
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு தொழிற் பேட்டையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இங்குள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சேதராப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சேதராப்பட்டு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கஞ்சா புழக்கம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக கனரக தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
சேதராப்பட்டு, துத்திப்பட்டு, வில்லியனூர் பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள அடர்ந்த பகுதியில் கஞ்சா புகைப்பதும் அதனை போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று சேதராப்பட்டு ஏரிக்கரையில் ரோந்து பணிமேற்கொண்டனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவரது உடமைகளை சோதித்தனர். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஒடிசா மாநிலம் ஹஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த சோமநாத் (வயது32) என்பதும், திருமணமாகி மனைவியுடன் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
சோம்நாத் வீட்டில் சேதராப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டுக்குள் அறையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
கர்ப்பிணியான சோமநாத் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சா பொட்டலங்களை கிலோ கணக்கில் கடத்தி வந்து 10 கிராம் அளவிற்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதை ஒரு பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
சேதராப்பட்டில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது திருச்சிற்றம் பலம் கூட்ரோடு, ஆரோவில் பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சாவை சோம்நாத் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
சோம்நாத்தை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.