உள்ளூர் செய்திகள்
கோவில் விழாவில் மோதல்-2 பேர் படுகாயம்
காலாப்பட்டு அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே பிள்ளைச் சாவடியில் பல்கலைக்கழக பின் புறம் தமிழகப்பகுதியில் அமைந் துள்ள அய்யனாரப்பன் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
அப்போது பிள்ளைச் சாடியை சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த மாரியப்பன் என்ற மணிகண்டன் (வயது 24) மற்றும் ஆனந்து என்ற பாஸ்கர் (50) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே காலாப்பட்டு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோதல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.