உள்ளூர் செய்திகள்
மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம்-அ.தி.மு.க. கோரிக்கை
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெங்களுரூ குடிநீர் தேவை என்ற போர்வையில் 67 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளை பாலைவனமாக்கும் உள் நோக்கம் கொண்ட செயலாகும்.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கர்நாடக அரசின் சட்ட விரோத அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசால் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே, காவிரியின் கடைமடை மாவட்டமான காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசை பின்பற்றி புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டத்திற்கு விரோதமாகவும் தமிழக, காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிராக மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட இருக்கும் கர்நாடக அரசின் முடிவை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறி உள்ளார்.