உள்ளூர் செய்திகள்
.

பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2022-03-22 15:30 IST   |   Update On 2022-03-22 15:30:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது30). இவருக்கு தருமபுரி மாவட்டம், இண்டூர், தளவாய்ஹள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

கடந்த, 2019, மார்ச் 11ல், ஊர் பண்டிக்கைக்காக தன் தாய் ஊரான நெருப்புக்குட்டைக்கு தேவி வந்து தங்கியுள்ளார். மார்ச், 13&ந்தேதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தன் வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். 

அப்போது அதேபகுதியை சேர்ந்த அம்பிகா (30) என்பவர் தேவியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து தேவி அளித்த புகார்படி அம்பிகாவை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி லதா தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அம்பிகாவுக்கு, 5 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், கட்டத்தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

Similar News