உள்ளூர் செய்திகள்
சட்ட சபையில் கவர்னர் உரை இடம் பெறாது
கூட்ட தொடரின் தொடர்ச்சி என்பதால் சட்ட சபையில் கவர்னர் உரை இடம் பெறாது என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சட்டப்பேரவை 2-வது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கூடி அன்றைய தினமே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந் தேதி மீண்டும் சட்டமன்றம் கூட்டப்பட இருக்கிறது அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
மேலும், கூடுதல் செலவீனங்களுக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்படும். அரசின் திட்டங்களை செயல் படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் என்ற முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது.
கூட்ட தொடரின் தொடர்ச்சி என்பதால் கவர்னர் உரை இடம் பெறாது. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கவர்னர் உரை இடம் பெறும். அனைத்து மாநிலங்களின்
சட்ட மன்றத்தை பார்வையிட்டு புதிய வடிவமைப்பில் புதுவை சட்டமன்றம் கட்டப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.