உள்ளூர் செய்திகள்
ரூ.42 கோடியில் புறநகர் பஸ்நிலையம்
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புறநகர் பஸ்நிலையம் அமைக்கப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ்நிலைய த்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என நேரு எம்.எல்.ஏ. ஏற்கனவே புகார் செய்திருந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பஸ்நிலையத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
புதிய பஸ்நிலையத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் வல்லவன், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண் ஆகியோரை அழைத் திருந்தார். இதையேற்று கலெக்டர் வல்லவன், செயல் அதிகாரி அருண் ஆகியோர் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.
நேரு எம்.எல்.ஏ. அவர்களை அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதியாக காண்பித்தார். மின்அறை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவறை, கடைகள், பஸ் நிறுத்துமிடம் ஆகியவற்றை சுற்றிக்காட்டினார்.
சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. மின் அறையில் கதவே இல்லாமல் வயர்கள் வெளிப்படையாக உள்ளதை சுட்டிக்காட்டி சீரமைத்து தரும்படி கோரினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுத்தகட்டமாக புதிய பஸ்நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. என அருண் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:&
புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என எம்.எல்.ஏ. நேரு புகார் கூறியிருந்தார். பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதி, குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா வசதி, வாகன நிறுத்துமிடத்தில் கட்டண வசூலை முறைப்படுத்துவது உட்பட பல விஷயங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு செய்தோம். உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக் கப்படும். சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பழுதாகியுள்ளவற்றை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள இருக்கைகள் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப் பட்டு நிறுவப்படும். கழிவறைகள் சுத்தமாக உள்ளன. இன்னும் அதிக கவனம் செலுத்தி பெருநகரங்களுக்கு இணையாக, விமான நிலையத்தில் உள்ளதுபோல கழிப்பறையை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என ஆய்வு செய்து தரவுகள் தயாரிக்கப்பட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே காலியிடத்தில் புதிதாக புற நகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் ஒப்புதலோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.42 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.