உள்ளூர் செய்திகள்
சாய்பாபா சிலை உடைக்கப்பட்டுள்ள காட்சி

சாய்பாபா சிலை உடைத்து எரிப்பு: பதட்டம்-போலீஸ் குவிப்பு

Published On 2022-03-22 14:26 IST   |   Update On 2022-03-22 14:26:00 IST
புதுவை அருகே சாய்பாபா சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் காட்டுத்தீபோல் பரவியதையடுத்து அங்கு பக்தர்கள் குவிந்தனர்.
சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த இரும்பை புறவழி சாலையில் லாஸ்பேட்டையை சேர்ந்த சந்துரு என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு இடம் வாங்கி அதில் சிறு கொட்டகை அமைத்து சித்தர் சீரடி சாய்பாபா கோவிலை கட்டினார்.

கடந்த ஆண்டு இக்கோவிலில் குருபூஜை விழா விமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சித்தர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

தற்போது அந்த இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கோவில் கட்டிடம் கட்டி மே மாதம் 8-ந் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. அதற்காக ஜெய்ப்பூரில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் 2 டன் சித்தர் சாய்பாபா சிலை கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டு கோவில் வளாகத்தில் மரத்திலான அட்டைப்பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோவிலில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய்குமார் என்பவர் தங்கி பூஜைகள் செய்து பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவர் எழுந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சித்தர் சாய்பாபா சிலை தலை துண்டிக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சாய்குமார் கோவில் உரிமையாளர் சந்துரு, கோவில் நிர்வாக செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே கோவிலுக்கு வந்த சந்துரு எரிக்கப்பட்டிருந்த சாய்பாபா சிலையை பார்த்து துயரம் தாளாமல் கதறி அழுதார்.

பின்னர் இதுகுறித்து அவர் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ கோவில் அறையில் இருந்த கடப்பாரையை எடுத்து பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா சிலையை உடைத்து சேதப்படுத்தி அதனை தீவைத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் காட்டு தீபோல் பரவியதையடுத்து அங்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆரோவில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News