உள்ளூர் செய்திகள்
ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தெப்ப உற்சவ விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ விழா நடந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை விமரிசையாக நடந்தது. அடுத்த நாள் (சனிக்கிழமை) இரவு ராவண உற்சவம் நடைபெற்றது.
இதில், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன், அனுமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, வாணவேடிக்கைகளுடன் தேர்பேட்டை வீதிகளில் விடிய, விடிய பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. ஓசூர் தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமியை வைத்து, மேள வாத்தியம் முழங்க, குளத்தை சுற்றி தெப்பம் 3 முறை வலம் வந்தது.
அப்போது பக்தர்கள், சாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். தெப்பத் திருவிழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.