உள்ளூர் செய்திகள்
நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
நகராட்சி-கொம்யூன் ஊழியர்கள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கேட்டு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நலச்சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பல கட்ட போராட்டங் களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர் விடுப்பு எடுத்து உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் இந்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் நடைபெறும் போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகவேல், ஆனந்தகணபதி, வேளாங்கண்ணிதாசன், பாலசுப்பிரமணியன், மாணிக்கம், சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை 1.1.2016 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும், 2004-ம் ஆண்டுக்கு பின் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது-.
ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய தால் நகராட்சி, கொம்யூன் பணிகள் பாதிக்கப்பட்டது. பாரதி பூங்கா உட்பட நகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு கிடந்தது.