உள்ளூர் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர்கள் கதறல்
தேவதானப்பட்டியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து பேசினர்
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது பற்றிய கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக அரசு பள்ளிகளில் அமைக் கப்படும் மேலாண்மைக்குழு, நடவடிக்கைகள், அதன் செயல்பாடுகள், பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப் பட்டது.
இதில் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாக தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவர் கத்தியுடன் ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசியதால் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு இருக்குமா? என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனால் இப்பகுதியில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பள்ளிகள் தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் பெண் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். பெற்றோர்களின் இந்த கோரிக்கையால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.