உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரையாக வந்த தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மும்மதத்தினர் வரவேற்பு
திருக்கடையூருக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மும்மதத்தினர் வரவேற்பு அளித்தனர்.
தரங்கம்பாடி:
திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நேற்று முன்தினம் ஆதீன மடத்தில் இருந்து ஆதின பூஜா மூர்த்தியாகிய சொக்கநாதப் பெருமான் உடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கினார். நேற்று 2-ம் நாளாக பாதயாத்திரை காலஹஸ்தினாபுரத்தில் இருந்து தொடங்கியது.
ஆக்கூர் ஊராட்சியில் தலைவர் சந்திரமோகன் தலைமையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்பில், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிவாசல் சார்பில் ஜமாத்தார்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகிய மும்மதத்தினரும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மரியாதை செய்து வரவேற்றனர்.
தொடர்ந்து ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூரண கும்ப மரியாதையுடன் மரியாதை அளிக்கப்பட்டது.
தருமை ஆதீனம் சிவனை வழிபட்டு வரவேற்பு அளிக்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆக்கூர் முக்கூட்டு முனீஸ்வரன் கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி முருகவேல் மடாதிபதியை வரவேற்றனர்.
நேற்று இரவு திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் பாதயாத்திரையாக வந்த தருமபுர மடாதிபதியை திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா சிவராஜ், ஊராட்சி செயர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் செந்தில் உட்பட பலர் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்றடைந்த தருமபுர ஆதீன மடாதிபதியை கோவில் ஊழியர்கள், பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் மலர்கள் தூவி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் கணேஷ் குருக்கள், மகேஸ் குருக்கள் பள்ளி, கல்லூரி நிர்வாக செயலர் செல்வநாயகம், முன்னாள் ஏ.வி.சி. கல்லூரியின் செயலாளர் செந்தில்வேலன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.