உள்ளூர் செய்திகள்
தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து சூதாட்டம்-7 பேர் கைது
எல்லைப்பிள்ளை சாவடியில் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடி அய்யனார் கோவில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெரிய அளவில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் அந்தோணிசாமி மற்றும் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விடுதியின் ஒரு அறையில் 6 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் (ரம்மி) ஈடுபட்டுக் கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
உடனே அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை சலவையாளர் நகரை சேர்ந்த செந்தில் (42) சாரம் தென்றல் நகரை சேர்ந்த சீனு (46) லாஸ்பேட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்த சரவணன் (42) முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரைச் சேர்ந்த அருண்குமார் (33) வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (36) மற்றும் குமரகுரு பள்ளம் ஆயில் மில் தெருவை சேர்ந்த மனோகர் (46) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு, சூதாட்டப்பணம் ரூ.22 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கும் விடுதியை வாடகை எடுத்து சூதாட்டத்துக்கு அனுமதித்த வேல்ராம்பட்டு மறைமலைநகரை சேர்ந்த நடராஜன் என்ற கதிர்வேல் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.